கடும் எதிர்ப்பை மீறியும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியது.. கலைக்கப்படும் மருத்துவ கவுன்சில்!
லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று இரண்டு அவையிலும் கடும் எதிர்ப்பை மீறியும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி: லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று இரண்டு அவையிலும் கடும் எதிர்ப்பை மீறியும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 63 வருடமாக இந்திய மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்திய மருத்துவத்துறையை இந்த கவுன்சில்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.
இந்த கவுன்சலிங் கண்காணிப்பிற்கு கீழ்தான் மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் இயங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட உள்ள தேசிய மருத்துவ ஆணையம் இனி அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக செயல்படும்.
அப்போதே
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட போதே அதற்கு எதிர்க்கட்சிகள் பல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
கடும் எதிர்ப்பு
திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் எதிர்ப்பை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கூறியது. ஆனாலும் லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதாவை பாஜக எளிதாக நிறைவேற்றியது.
என்ன போராட்டம்
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். நாடு முழுக்க பல இடங்களில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
நிறைவேறியது மசோதா
இன்று இந்த மசோதா ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தர். நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆனால் இந்த மசோதா அந்த தேர்வுகளுக்கு பலம் சேர்க்கிறது. அதனால் இதை ஆதரிக்க முடியாது என்று அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆனால் என்ன
ஆனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று இரண்டு அவையிலும் கடும் எதிர்ப்பை மீறியும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேறியது. இந்த தேசிய மருத்துவ ஆணையம் நீட், நெக்ஸ்ட் நுழைவு தேர்வுகளை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக கலைப்பு
இந்த தேசிய மருத்துவ ஆணையம் இனி அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக செயல்படும். இந்த மசோதா மூலம் மருத்துவத்தில் முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எம்பிபிஎஸ் இளங்கலை படித்த மாணவர்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் இதனால் ஏற்படும்.