மோடி பிறந்த நாள்...தேசிய வேலையின்மை நாள்... ஹேஸ்டேக்குகள் போட்டா போட்டி!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கிறது. மறுபக்கம் எங்களுக்கு வேலை வேண்டும் என்றும், செப்டம்பர் 17 தேசிய வேலையின்மை நாள் என்றும் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
நாட்டில் கொரோனாவுக்கு முன்பு வேலை இழப்பும், வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்துக் காணப்பட்டது. கொரோனாவுக்குப் பின்னர் பெரிய அளவில் வேலை வாய்ப்பை இந்தியர்கள் இழந்ததுடன், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகவில்லை.
முழு உடல் பரிசோதனை முடிந்தது.. எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்!
வேலை வாய்ப்பு
பிரதமர் மோடி வேலை வாய்ப்பை உருவாக்கத் தவறிவிட்டார் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடாமல் இதுகுறித்து குரல் கொடுத்து வந்தார். இன்றும் பதிவு செய்ய அவர் மறக்கவில்லை.
கிராமங்கள்
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின்படி இந்தியாவில் 2020, செப்டம்பர் 6ஆம் தேதியுடன் முடிவடைந்த நாளில் நகர்ப்புறங்களில் வேலையின்மை 8.32 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் கடந்த ஜூலை மாதம் வேலையின்மை 6.66 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 7.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கவுரவமானது
இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதியை தேசிய வேலையின்மை நாளாக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவு செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து பதிவு செய்து இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மையை டிவிட்டரில் பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார். வேலை என்பது ஒவ்வொருவருக்கும் கவுரவமானது. எவ்வளவு நாட்களுக்குத்தான் வேலை வாய்ப்பை மத்திய அரசு மறுத்து வரும் என்று கேட்டுள்ளார்.
பொருளாதாரம்
சிலர் தங்களது பதிவுகளில் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. விவசாயிகள் திருப்திகரமாக இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. சிறுதொழில் சீர்குலைந்துள்ளது. நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகால பாஜக ஆட்சியில் 17 கோடி வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாஜக அரசு அழித்து வருகிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.