நாட்டில் சாதியத்தை விட தேசியவாதமே மேலோங்கியுள்ளது.. பாஜக வெற்றி குறித்து ஷாநவாஸ் ஹுசைன் கருத்து
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக பெற்றுள்ள அபார வெற்றியின் மூலம், நாட்டில் சாதியத்தை விட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிவதாக அக்கட்சியின் செய்திதொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று 303 தொகுதிகளில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது பாஜக. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது அக்கட்சி எம்.பி-க்களின் ஆலோசனை கூட்டம்.
இக்கூட்டத்தில் மீண்டும் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்நிலையில் பாரதிய ஜனதாவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஷாநவாஸ் ஹுசைன், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதமர் மோடியின் வெற்றி மேலும் பலப்படுத்தும்.
சாதி, இனம், மதம் பாராமல் பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என விரும்பி மக்கள் வாக்களித்துள்ளனர். மொழி பாகுபாட்டையும் பார்க்காமல் தான் மக்கள் மோடிக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தான் மோடி உழைத்தார், உழைத்து வருகிறார் என மக்களுக்கு புரிந்துள்ளது. பிரதமர் மோடியின் அசாத்திய செயல்பாடுகளுக்கு உரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் பேசிய ஷாநவாஸ், நாட்டில் மதவாதம் மற்றும் சாதியத்தை விட தேசியவாதமே மேலோங்கி நிற்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக கூறினார்.
சாதியத்தை அடிப்படையாக வைத்து எதிர்கட்சிகள் பல இடங்களில் கூட்டணி அமைத்தன. ஆனால் எதிர்கட்சிகளின் கருத்தை மக்கள் புறந்தள்ளி பாரதிய ஜனதாவிற்கே ஆதரவளித்துள்ளனர்.
குறிப்பாக இந்த செய்தியை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்கள் நன்றாகவே எதிர்கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளனர். மேற்கண்ட மாநிலங்களில் சாதி அடிப்படையிலான கூட்டணியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என கூறியுள்ளார்.