பூமியின் பூதாகர எதிரியாக உருவெடுத்த கொரோனா.. கத்தியின்றி ரத்தமின்றி.. ஒரு யுத்தம்!
டெல்லி: உலகில் உள்ள நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக சண்டையிட்டு கொள்ளும் நிலையில் உலகத்தின் மீது இயற்கை ஏவிய யுத்தமே இந்த கொரோனா வைரஸ் என்பது இந்த நேரத்தில் நல்ல உவமையாகும்.
Recommended Video
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் சில நேரங்கள் சண்டையிட்டுக் கொள்ளத்தான் செய்கின்றன. இது தற்போது இல்லை கடந்த 1914-ஆம் ஆண்டு முதலாம் உலக போர் தொடங்கிய போதிலிருந்தே இந்த சண்டைகள் ஆலமரம் போல் வளர்ந்துள்ளன.
1939ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலக போர் ஏற்பட்டது. இந்த போர் அதிக அளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்தியது என்ற வரலாற்றை சுமந்துள்ளது. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு காரணங்களுக்காக சண்டையிட்டு கொள்கின்றன.
இந்தியா மறுப்பு
இந்தியா பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் காஷ்மீர் விவகாரம். இதை திரும்ப பெற இந்தியா மறுத்ததை அடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் பொருளாதார தடை விதித்தது. அது போல் பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என உலக நாடுகளால் வர்ணிக்கப்படும் அளவுக்கு அங்கு தீவிரவாதம் தலைத்தூக்கி வருகிறது.
அதிருப்தி
தீவிரவாதத்தை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் இந்தியா வந்த போதும் தீவிரவாதத்தை வேருடன் அழிப்போம் என்ற கருத்தை கூறினார். அது போல் வடகொரியாவை எடுத்துக் கொண்டால் அணு ஆயுத சோதனை நடத்தி அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.
சண்டை சச்சரவுகள்
அது போல் சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய மக்களை இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள் தாக்கிக் கொன்றனர். பலியானவர்களில் 121 பேர் குழந்தைகள் ஆவர். இந்த போரும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரியை விதிக்கிறது. பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரியை விதிக்கிறது. இது போல் எங்கு திரும்பினாலும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
விழிப்பிதுங்க
டோக்லாம் விவகாரத்தில் சீனா இந்தியா மீது போர் தொடுக்க திட்டமிட்டிருந்தது. இது போல் தேவையில்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொண்டு குண்டு வைப்பது, போர் தொடுப்பது,பொருளாதார தடை விதிப்பது உள்ளிட்டவற்றை செய்து வந்த நிலையில் கொரோனா என்ற ஒற்றை வார்த்தை இன்று உலக நாடுகளையே விழிப்பிதுங்க வைக்கிறது.
வளரும் நாடுகள்
அந்த கொரோனாவுக்கு வளர்ந்த நாடுகள், வளரும்நாடுகள், பயங்கரவாதத்தை ஊக்கும் நாடு, ஒற்றுமையை வளர்க்கும் நாடு என பாகுபாடில்லாமல் அனைவரையும் சமமாக நடத்துகிறது. சுருக்கமாக சொல்ல போனால் உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்து ஒரு யுத்தத்தையே நடத்தி வருகிறது. எனவே இயற்கைக்கு முன்னர் வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள், பின் தங்கிய நாடுகள் என அனைத்தும் ஒன்றுதான் என்பதை இந்த கொரோனா நிரூபித்து விட்டது.
ஆரோக்கியம்
இனியாவது மற்ற நாடுகள் மீது போர் தொடுப்பது, பிரமிப்புக்காக ஆயுதத்தை வாங்குவது உள்ளிட்டவற்றை விட்டுவிட்டு இயற்கை சீர்கெடாமல் பார்த்து கொள்ள ஒட்டுமொத்த மனித குலமும் இணைய வேண்டும். இந்த கொரோனாவை விழிப்புணர்வு பாடமாக எடுத்துக் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை ஒழித்து விட்டு ஒட்டுமொத்த வளர்ச்சிகாகவும் ஆரோக்கியத்திற்காகவும் செயல்படும் என நம்புவோம்!.
கொரோனாவை விரட்டுவோம்.. உலகை காப்போம்!