2020-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 1.20 லட்சம் பேர் மரணம்... தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை..!
டெல்லி: நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 1.20 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போதும் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
கடந்தாண்டு இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 328 பேர் சாலை விபத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனிடையே கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 3.92 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் மரணம் அடைந்துள்ளனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் பேரும், 2019-ம் ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரம் பேரும் விபத்துக்களில் சிக்கி நாடு முழுவதும் பலியாகியுள்ளனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 2018-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் விபத்துக்களில் 41 ஆயிரத்து 196 வழக்குகள் ஹிட் அண்ட் ரன் பிரிவில் பதியப்பட்டுள்ளது.
இதேபோல் 2019-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் விபத்துக்களில், 47 ஆயிரத்து 028 வழக்குகள் ஹிட் அண்ட் ரன் பிரிவில் பதியப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டு மட்டும் 1.30 லட்சம் வழக்குகள் கவனக்குறைவாக வாகனங்களை இயக்குதல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் பதியப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் ரயில் விபத்துக்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. கடந்த 2020-ம் ஆண்டு 52 பேர் நாடு முழுவதும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு 40 பேரும் 2019-ம் ஆண்டு 147 பேரும் நாடு முழுவதும் ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்ற விவரத்தையும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 25-ம் தேதி 2020 முதல் மே 31-ம் தேதி 2020 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டதால், இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள், உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து காணப்பட்டதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிய வருகிறது.
கொள்ளையடித்த பணத்தில் கார், ரூ 1 லட்சத்தில் வாஷிங் மெஷின்.. இரு மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை