தேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா
டெல்லி: மகாராஷ்டிரா ஆளுநரை பார்த்தோமா, பிற விஷயங்களை பற்றி ஆலோசித்தோமா என்று இல்லாமல், தேசிய மகளிர் ஆணைய தலைவி, ரேகா ஷர்மா தெரிவித்த ஒரு கருத்து இப்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
மும்பையில், நேற்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர், பகத் சிங் கோஷ்யாரியை ரேகா சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த புகைப்படம் தேசிய பெண்கள் கமிஷன் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.
அதில், மகாராஷ்டிரா மாநிலத்தின் கோவிட் மையங்களில் பெண் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஒன் ஸ்டாப் மையத்தின் செயலற்ற தன்மை மற்றும் லவ் ஜிஹாத் வழக்குகளின் அதிகரிப்பு குறித்து ஆளுநருடன் ரேகா ஷர்மா விவாதித்தார் என்று தெரிவிக்கப்பட்டிந்தது.
அங்கே 15தான்.. எங்க பக்கம் 100 எம்எல்ஏ.. எடியூரப்பா சிஎம் பதவி காலி.. கர்நாடக பாஜகவில் வெடித்த கலகம்
லவ் ஜிகாத்
'லவ் ஜிஹாத்' என்ற வார்த்தையை அவர் எதற்காக பயன்படுத்தினார் என்பதுதான் சர்ச்சைக்கு காரணம். கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்திலேயே 'லவ் ஜிஹாத்' என்ற சொல் தற்போதைய சட்டங்களில் வரையறுக்கப்படவில்லை என்றும் அது தொடர்பான வழக்கை எந்த மத்திய புலனாய்வு நிறுவனமும் பதிவு செய்யவில்லை என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்திருந்தார்.
மதம் மாற சுதந்திரம்
மேலும் எந்தவொரு மதத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் அரசியலமைப்பு அனைவருக்கும் சுதந்திரம் அளித்துள்ளது என்றும் அரசு சார்பில் கூறப்பட்டது. இப்படி இருக்கும்போது, மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஒருவர் பெண்கள் காதலிப்பதற்கு எதிராக பேசியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்கள் கொலையான வழக்குகள்
பல்லவி என்ற டுவிட்டர் பயனர் இதுபற்றி கூறுகையில், பிற மதங்களில் திருமணம் செய்ததற்காக பெண்கள் தாக்கப்பட்டு கொல்லப்படும் வழக்குகளை தேசிய பெண்கள் ஆணையம் விசாரிக்கும் என்று இனிமேல் நம்ப முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இது மூர்க்கத்தனமானது, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறித்த அரசின் அலட்சியம் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புகார் இருக்கிறதா
மற்றொரு பயனர் ஷாஹ்னா யாஸ்மின் கூறுகையில் "எந்த 'லவ் ஜிஹாத்' வழக்குகள் மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டது. ரேகா ஷர்மா ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற மனநிலையில் உள்ள ஒரு பெண், மகளிர் ஆணையத்திற்கு தலைமை தாங்கும்போது, இந்த நாட்டில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நடிகை உர்மிளா மாடோண்ட்கர் ட்வீட் செய்துள்ளார்.
பாஜகவில் இருந்தவர்
ரேகா ஷர்மா 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். தேசிய மகளிர் ஆணையத்தில் இணைவதற்கு முன்பு அவர் பாஜகவில் இருந்தார். ஹரியானாவில் பாஜகவின் மாவட்ட செயலாளராகவும் ஊடக பொறுப்பாளராகவும் இருந்தவர் ரேகா ஷர்மா.இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து #SackRekhaSharma ட்விட்டரிலும் டிரெண்ட்டானது. எதிர்க்கட்சியான காங்கிரசும் ரேகா ஷர்மாவை ராஜினாமா செய்யக் கோரியுள்ளது.
மகாராஷ்டிரா நிலவரம்
நேற்று, ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு, மகாராஷ்டிராவில் பெண்கள் பாதுகாப்பு நிலை குறித்து ரேகா ஷர்மா கடும் கோபம் வெளிப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய ரேகா ஷர்மா, மாநிலத்தில் புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர், மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்படவில்லை. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருப்பதால், பெண்களின் புகார்கள் தொடர்பான நான்காயிரம் வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். ஆனால், லவ் ஜிகாத் பேச்சால், குற்றச்சாட்டு இப்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.