ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?.. தாயும் உயிருக்கு போராட்டம்
டெல்லி: ஆந்திர மாநில முன்னாள் ஆளுநரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான என் டி திவாரியின் மகன் நேற்று திடீரென உயிரிழந்தார். அவர் உடலில் காயங்கள் இருந்ததால் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயின் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததால் அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் நைநிடாலை சேர்ந்தவர் என் டி திவாரி. இவர் 1952 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார் அதன் பின்னர் காங்கிரசில் இணைந்தார். இவர் காங்கிரசில் படிப்படியாக வளர்ந்து உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் பிரிந்தபோது அங்கும் போட்டியிட்டு முதல்வரானார். இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல்வராக இருந்த பெருமை இவருக்கு மட்டும்தான் உண்டு. அதன் பின்னர் மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளை வகித்துள்ளார்.
மரபணு சோதனை
2008 -ம் ஆண்டு இவர் ஆந்திரா மாநில ஆளுநராக பதவி வகித்தபோது ரோஹித் என்ற இளைஞர் என் டி திவாரிதான் தனது தந்தை என்று கூறினார். ஆனால் திவாரி இதை திட்டவட்டமாக மறுத்தார். அதன் பின்னர் நடைபெற்ற மரபணு சோதனையில் என் டி திவாரிதான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதியானது. அதன் பின்னர் சமாதானமாக செல்கிறோம் என்று இருவரும் நீதிமன்றத்தில் கூறியதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
திவாரியின் காதலி
இதன் பின்னணியை சற்று திரும்பி பார்த்தால் ஹரியானா மாநில அமைச்சர் ஒருவர் தனது பதவி காலம் முடிந்தபின்னரும் அரசு பங்களாவை காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். அப்போது அந்த பங்களாவுக்கு புதிய எம்.பி ஒருவர் வருகிறார். வந்த எம்.பி பங்களாவை தனக்கு சொந்தமாக்கி கொண்டதோடு அங்கு ஏற்கனவே வசித்து வந்த முன்னாள் அமைச்சரின் மகள் உஜ்வல் என்பவரையும் தனக்கு சொந்தமாக்கி கொண்டார். விளைவு அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அந்த மகன்தான் ரோஹித்.
தந்தையை கண்டுபிடித்த மகன்
அவன் வளர்ந்த பின்னர் தன்னுடைய தந்தை ஆந்திர மாநில ஆளுநராக இருக்கிறார் என்பதை அறிந்து வழக்கு தொடுக்கிறார். அதன் பின்னரே இந்த சமாதானப் படலம் நடந்தது. பின்னர் மகன் முன்னிலையிலேயே என் டி திவாரி தனது பழைய காதலியும் தனது மகனின் தாயுமான உஜ்வலை திருமணம் செய்து கொள்கிறார். என் டி திவாரியின் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன்னரே இறந்து போயிருந்தார். அதுபோல உஜ்வலின் கணவரும் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ம் தேதி திவாரியும் மரணமடைந்து விட்டார்.
திவாரி மகன் மரணம்
திவாரிதான் தனது தந்தை என நிரூபிக்க ரோஹித்(40வயது) ஆறு வருடங்கள் கடுமையாக போராடினார். இப்படிப்பட்ட நிலையில் ரோஹித் நேற்று மாலை திடீரென இறந்தார். நேற்று மாலை 5மணிஅளவில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக டெல்லியில் உள்ள மாக்ஸ் சாகேத் மருத்துமனைக்குஅழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இறந்து போன என் டி திவாரியின் மகன் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடைய மகன் இறந்த தகவல் கேட்டு அவரது தயாருக்கு மூக்கில் இரத்தம் வடிந்துள்ளது. இதனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.. நான் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சி கம்யூனிஸ்ட்கள்தான்- கமல்