கரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு
டெல்லி: கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய பிரச்சினையான கரோனா வைரஸுக்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் அதை கையாளும் நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
சீனாவில் கரோனா வைரஸ் நோயால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துகின்றனர்.
நோய் அறிகுறி இருப்போருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா.. 'அய்யனார்' சிலையில் பூணூல் அணிவித்தது ஏன்? - சிலையை வடிவமைத்தவர் விளக்கம்
சீனா போல் இந்தியாவிலும் இந்த வைரஸ் நோய் பரவினால் அதை கையாளும் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஆய்வு செய்தார். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில் இந்தியாவில் இது வரை யாருக்கு கரோனா நோய் பாதிப்பு ஏற்படவில்லை.
சீனாவில் இருந்து வந்த 7 பயணிகளின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 4 பயணிகளின் ரத்த மாதிரி முடிவுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வந்துள்ளது.