ப.சிதம்பரத்தை கஸ்டடி எடுக்கணும்.. அனுமதி கோரிய சிபிஐ… அதிர்ந்து போன காங்கிரஸ் முகாம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணையில், ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் சட்ட விரோதமாக அனுமதி பெற்றது.
அதற்கு கார்த்தி சிதம்பரம் தமது தந்தை ப.சிதம்பரம் மூலம் அனுமதி பெற்றுத் தந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்காக அந்த நிறுவனம் கொடுத்த லஞ்சப் பணத்தை கார்த்தி சிதம்பரம் வாங்கியுள்ளார் என்றும் அந்த நிறுவனத்தையே அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
விசாரணை நடத்தும் சிபிஐ
இது தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தடை விதிப்பு
இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காவலில் எடுக்க முடிவு
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா நீதிமன்றத்தில் கூறியதாவது:விசாரணையின்போது ப.சிதம்பரம் நீட்டி முழக்கி பதில்களித்து மழுப்பப் பார்க்கிறார். அவரிடம் இருந்து உண்மையான விவரங்களை பெற அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மேதா தெரிவித்துள்ளார்.
குற்றவாளி இல்லை
ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடியதாவது: 2018 ஜூன் மாதம் ஒரே ஒரு முறை மட்டுமே ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அந்த சமயம், எப்.ஐ.ஆரில் சிதம்பரம் குற்றவாளி என்று குறிப்பிடப்பிடவில்லை.
அனுமதிக்கக்கூடாது
குற்றவாளி என கூறப்படப்பட்ட 5 பேரில் 4 பேர் ஜாமீன் இருக்கின்றனர் என்று கூறி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.