சைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஓடிடி தளங்களை முறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை விதிகளை நாளைக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அமேசன் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் தாண்டவ். சைப் அலிகான், டிம்பிள் கபாடியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிசில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் உள்பட பல மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், 'தாண்டவ்' சர்ச்சை குறித்த மனு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
விசாரணையின் போது, அமேசான், நெட்ஃபிலிக்ஸ் போன்ற தளங்களில் சில சந்தர்ப்பங்களில் ஆபாச காட்சிகள் நிறைந்த படங்கள் ஒளிபரப்பப்படுவதை இந்த நீதிமன்றம் கவனிக்கிறது. எனவே, இந்த ஓடிடி தளங்களில் "சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஓடிடி தளங்களை முறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை விதிகளை நாளைக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை தாண்டவ் தொடரில் இருந்து நீக்கிவிட்டதாகவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அமேசன் நிறுவனம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கற்பனை கதையை அடிப்படையாக கொண்ட தாண்டவ் தொடரில் சில காட்சிகள் பார்வையாளர்களின் மனதை புண்படுத்துவதாக எங்களுக்கு தெரியவந்தது. அந்த காட்சிகளை நீக்கி விட்டோம், சில காட்சிகளை எடிட் செய்து விட்டோம். நாங்கள் பார்வையாளர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்" அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.