மோசடி மன்னன் நீரவ் மோடி பிரிட்டனில் உள்ளார்... இந்தியா அழைத்து வரப்படுவாரா? மத்திய அரசு பதில்
டெல்லி: வங்கி மோசடி புகழ் மன்னன் நீரவ் மோடி பிரிட்டனில் பதுங்கி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் கோடிக்கணக்கான தொகையை கடனாக பெற்று அதனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலில் இருப்பவர் நீரவ் மோடி. வெளி நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் அவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் வங்கி மோசடி புகழ் மன்னன் நீரவ் மோடி பிரிட்டனில் பதுங்கி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அளித்த பதிலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நீரவ் மோடி எங்குள்ளார்? அவரை இந்தியா கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகர புலனாய்வு அமைப்புகள் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து பிரிட்டன் அதிகாரிகளுக்கு தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவது குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரவ் மோடி பிரிட்டனில் பதுங்கியுள்ளதை அங்குள்ள புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளன. இந்தியாவின் கோரிக்கைகள் அனைத்தும் பிரிட்டன் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.