நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட புதிய மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி மீண்டும் புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பொழுது போக்கிற்காக மனு தாக்கல் செய்ய வேண்டாம் நீட் விவகாரத்தில் எல்லாம் முடிந்து விட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனோ நோய் தொற்று காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.
கொரோனா பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையே தேர்வுகள் நடப்பதை பல்வேறு மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
கடினமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுத முடியாது. இதனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த கூடாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வந்தது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் வழக்கு தொடுத்தன.
செப்.21 முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் சுயவிருப்பத்தின் படி பள்ளிக்கு வரலாம்.. இதை கவனமாக பாருங்க
தேர்வினை ரத்து வேண்டும் என்று கோரி 11 மாணவர்கள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்வை ரத்து செய்து உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதோடு நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட காட்சிகள் சார்பாக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு தடையில்லை என திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி கேசவ் மகேஸ்வரி என்பவர் உள்பட சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த புதிய மனுக்கள் இன்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்தும் முடிந்து விட்டன. ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டது, சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. பொழுதுபோக்காக தாக்கல் செய்யும் மனுக்களை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கூறிய நீதிபதிகள் யுஜிசி வழிகாட்டுதல்கள் நீட் தேர்வுக்கு பொருந்தாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீட் தேர்வை நடத்துபவர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.