தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிப்புதான்.. அதில் மாற்றுக்கருத்து இல்லை..நீதிபதி ஏகே ராஜன் திட்டவட்டம்
சென்னை: நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன், இது குறித்து தேவையான தரவுகளுடன் விரிவான அறிக்கை தமிழ்நாடு அரசுக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் MBBS மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் எம்பிபிஎஸ் மாணவ சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு.. இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் தகவல்
இருப்பினும், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையே உள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனச் சட்டசபையிலும்கூட ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம்
இருப்பினும், இந்த தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் இது சட்டமாகவில்லை. இந்நிலையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
2 மணி நேரம்
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சட்டத்துறைச் செயலர் கோபி ரவிகுமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தது. இதில் நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அதை நிரூபிக்க எந்த மாதிரியான தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மாற்றுக்கருத்து இல்லை
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன், "நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நீட் தேர்வால் பாதிப்புகள் குறித்து தேவையான ஆதாரங்களைத் திரட்ட உள்ளோம். நீட் தேர்வு பாதிப்புகளைக் கண்டறிய நமக்குத் தரவுகள் தேவை. இதற்காக முக்கிய தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
விரிவான அறிக்கை
தமிழ் வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விரிவாகத் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு கூறியுள்ளது. முடிந்தவரை அதற்குள் தாக்கல் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
அடுத்த கூட்டம்
மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.