நீட் தேர்வு ரிசல்ட் குளறுபடி: திருத்தப்பட்ட புதிய பட்டியல் இணைய தளத்தில் ரிலீஸ்
நீட் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து நீட் முடிவுகள் நீக்கப்பட்டு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
டெல்லி : பெரும் குளறுபடி ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளுக்கான பகுப்பாய்வு பட்டியல் நீக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. தேர்வை எழுத தவறிய மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும், http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என குளறுபடிகள் அம்பலமானது.
நீட் தேர்வு நடத்திய ஏஜென்சி மாநில அளவிலான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களில் தேர்வுக்கு விண்ணப்பித்தோர்; தேர்வு எழுதியோர்; தேர்ச்சி பெற்றோர் விவரமும் 2020ஆம் ஆண்டு தேர்வு தொடர்பான விவரங்களும் ஒப்பீட்டு தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்ள மாநிலம் திரிபுராதான். திரிபுராவில் 88889 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகாவும் இதற்கு அடுத்த இடத்தில்தான் மகாராஷ்டிரா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் மொத்த எண்ணிக்கையே 3536 பேர் மட்டும்தான் என அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
NEET: ஜீவித்குமாராகவே இருந்தாலும் கூட பணம் இல்லாமல் ஜெயிக்க முடியாது!
இந்த தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தவே, தமிழக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். எதிர்கட்சித்தலைவர்கள் பலரும் தேசிய தேர்வு முகமை மீது குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து நீட் முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி பிரிண்டிங் தவறால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதற்கான புதிய அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் தேசிய முகமை தேர்வு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நீட் முடிவு நீக்கப்படலாம் அல்லது தற்காலிகமாக பார்க்க முடியாது என தேசிய தேர்வு முகமை
இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.