நீட் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சிறுபான்மையினர், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, ஆண்டு தோறும் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, மணிப்பால் பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் சங்கங்கள் நீட் தேர்வில் விலக்கு கோரி மனு தாக்கல் செய்தன. அவர்கள் தங்கள் மனுக்களில் நீட் தேர்வு நடைமுறையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கையால் அரசு உதவி பெறாத தனியார் சிறுபான்மையினர் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. எனவே சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மருத்துவ படிப்புகளுக்காக தனியாக தேர்வு நடத்த அனுமதி வழங்கியும், நீட் தேர்வில் விலக்கு அளித்தும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த தேர்வின் கீழ் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் எதுவும் பறிக்கப்படவில்லை. கல்வி தரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த சமரசங்களுக்கும் இடமில்லை. கல்வி வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்பதே நீட் தேர்வின் நோக்கம்.
நீட் தேர்விற்கு மேலாக இன்னொரு தேர்வை வடிவமைப்பது சாத்தியமில்லாதது. அத்துடன் ஒரே மாதிரியான நுழைவு தேர்வு ஒழுங்கில்லாமல், நியாயமில்லாமல் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஒரே நுழைவு தேர்வு என்பது பல்வேறு குளறுபடிகளை தடுக்கும் நோக்கம் கொண்டது. இதன் மூலம் கல்வி வியாபாரம் ஆவதை தடுக்கவும், லாப நோக்கத்துடன் செயல்படுவதையும் சுரண்டப்படுவதையும் தடுக்கிறது. அத்துடன் தகுதியில்லாத மாணவர்களை கூடுதல்பணம் கொடுத்து சேர்ப்பதையும் தடுக்கிறது. எனவே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உரிய சட்டங்களின் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.