இப்போது நீட், ஜேஇஇ தேர்வை நடத்துவது பணக்கார வீட்டு மாணவர்களுக்குத்தான் சாதகம்- சு.சாமி பொளேர்
டெல்லி: கொரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு நாட்டில் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பல மாநில கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் திட்டமிட்டப்படி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நீட் தேர்வு...தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு...முந்திச் செல்லும் வடமாநிலங்கள்!!
தேர்வு அவசியமா
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் பொதுப் போக்குவரத்து துவங்கப்படாத நிலையில், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எப்படி சென்று தேர்வு எழுதுவார்கள், நூலகங்கள் மூடியிருக்கும் போது எப்படி மாணவர்களால் புத்தகங்களை வைத்து பயிற்சி எடுத்திருக்க முடியும், இப்படியான சூழ்நிலையில் இந்த தேர்வு அவசியமா என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.
பணக்காரர்களுக்கு பலன்
இந்த நிலையில்தான் பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதை பாருங்கள்: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் இந்த காலகட்டத்தில் நடத்தப்படுவது, பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மற்றும் பெரிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டுமே உதவும் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா? கடந்த 5 மாதங்களாக ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவு குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இணையதள சேவையை பயன்படுத்துவதற்கு சிரமமான நிலை உள்ளது. நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க முடியவில்லை. எனவே பிரதமர் இந்த விஷயத்தில் இரக்கம் காட்ட வேண்டும். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நிலை
சில தினங்களுக்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், தற்போது ஜேஇஇ மற்றும் நீட் ஆகிய நுழைவு தேர்வுகளை நடத்துவது, பல மாணவர்களின் தற்கொலைக்கு வழிவகுத்து விடும். எனவே தேர்வுகளை ஒத்திப் போட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் பிரதமர் மோடிக்கும், இக் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். தற்போது பழையபடியும் அவர் அதே போன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
அரசு உறுதி
ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரே அதிலும் சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரி அமைப்பினருடன் நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு தலைவர் இவ்வாறு கூறியும் கூட மத்திய அரசு அல்லது பிரதமர் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் குறிப்பிட்ட தேதியில் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருப்பது தெளிவாகிறது. இதனால், கிராமங்களில் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கக்கூடிய குழந்தைகள், ஏழை எளியோரின் குழந்தைகள், மருத்துவ நுழைவுத்தேர்வை எவ்வாறு எழுதுவது? ஜேஇஇ நுழைவுத் தேர்வை எப்படி பாஸ் செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.