நீட்,ஜேஇஇ தேர்வுகளை நடத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மத்திய அரசுதான் பொறுப்பு: நாராயணசாமி
டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தினால் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நீட்-ஜேஇஇ தேர்வு, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பங்கினை மத்திய அரசு செலுத்தாது, புதிய கல்வி கொள்கை, சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை ஆகியவை தொடர்பாக பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த்சோரன், நாராயணசாமி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், அமரீந்தர்சிங் உள்ளிட்டோர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை இந்த கூட்டத்தில் சோனியா காந்தி கடுமையாக சாடினார்.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்காத மத்திய அரசை கடுமையாக சாடினார் சோனியா காந்தி. இதில் பேசிய மமதா பானர்ஜி, மத்திய அரசு மாநில உரிமைகளை நசுக்குகிறது என விமர்சித்தார்.
முடிவெடுங்கள்.. மத்திய அரசுக்கு பயப்பட வேண்டுமா, எதிர்த்து நிற்க வேண்டுமா? உத்தவ் தாக்ரே ஆவேச கேள்வி
மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நீட்-ஜேஇஇ தேர்வுகளை தற்போதைய சூழ்நிலையில் நடத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும். நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இதேபோல் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 4 மாதங்களாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்றார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் தம்முடைய விசாரணை ஏஜென்சிகளை ஏவிவிடுகிறது மத்திய அரசு என்றார்.