மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்வு - ஜிஎஸ்டி வரி எவ்ளோ தெரியுமா
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துளளது. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுளள்து. நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கும் , முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, தனியார் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்ளுக்கு இந்த நீட் தேர்வின் மதிப்பெண் மூலம் சேர்க்கை நடைபெறும்.
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பது ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினரின் நிலைப்பாடாகும். இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத அஞ்சியே பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
முதுகலை மருத்துவ படிப்புகள்
இந்த நிலையில் முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அட்டவணையை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் அண்மையில் வெளியிட்டது. இப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று பிப்ரவரி 23 முதல் தொடங்கியுள்ளது.
மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் nbe.edu.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 3 மணி முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தேர்வு, கட்டணம், தேர்வு எழுதத் தேவையான தகுதி, ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள், கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் என்பிஇ வெளியிட்டுள்ளது.
தேர்வு கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, ஜிஎஸ்டி வரி ரூ.765 சேர்த்து, தற்போது ரூ.5,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டண உயர்வு
அதேபோலப் பட்டியலின, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினருக்கான நீட் தேர்வுக் கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில், 18 சதவிகித ஜிஎஸ்டி வரி ரூ.585 சேர்த்து, தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர்த்து இணையச் சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதிர்ச்சி
தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று கூறி வரும் நிலையில் கட்டணத்துடன் 18 சதவிகித ஜிஎஸ்டி வரியும் கட்டச் சொல்வதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.