நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறுதேர்வு.. நாளை மறுநாள் தேர்வு முடிவு
டெல்லி: நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தேர்வு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று (14ம் தேதி)தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்டோபர் 16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதன்படி இன்று நீட் தேர்வு மீண்டும் நடைபெற உள்ளது. ஏற்கனவே தவறிவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. செப்டம்பர் 13ம் தேதி தேர்வை தவறவிட்டர்கள் இன்று எழுதலாம். தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது.