வங்கதேசம், நேபாளம் நாடுகளுக்கு... கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி... அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
டெல்லி: இந்தியாவில் இருந்து வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவிலுள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தத் தடுப்பூசியை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுக்குத் தடுப்பூசி
கடந்த செவ்வாய்க்கிழமை பூட்டான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் அந்த நாடுகளிலுள்ள சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு விரைவாகத் தடுப்பூசி போட முடியும், மேலும் கொரோனா பரவலும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்சங்கர் பெருமிதம்
இந்நிலையில், தற்போது நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், அண்டை நாடுகளின் நலன்களுக்கு இந்தியா எப்போது அதிகபட்ச முக்கியத்துவத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களும், நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஏற்றுமதி
முன்னதாக இரு நாட்களுக்கு முன்னர், பூட்டான் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல விரைவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கிறது.
அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு
உலகிலேயே அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி உற்பத்தியிலும் விநியோகத்திலும் இந்தியாவில் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பிட்ட அளவு மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவுடன் சீரம் தடுப்பூசியின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.