பிரதமர் மோடியை சந்தித்தபின் டிரம்ப் போட்ட குண்டு.. இந்தியாவுக்கு அவமானம்..சீதாராம் யெச்சூரி ஆவேசம்
டெல்லி: பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின் டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கும் தொனியில் தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இதற்கு முன் இந்தியா இப்படி அவமதிக்கப்பட்டதே கிடையாது என தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாள் மாநாடு இன்று வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
இதேபோல் ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சார்பில் அந்தந்த நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தனியாக சந்தித்து இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், 5ஜி தொலை தொடர்பு சேவை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நேற்று பேசினார்கள்.
பிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி
இந்த பேச்சுவார்த்தைக்குபின் அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் பேசுகையில், அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியாவில் அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள மிக அதிகப்படியான வரியை குறைக்கும்படி வலியுறுத்தினேன். இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. கட்டாயம் வரிகள் குறைக்கப்பட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியா இதுபோன்று பகிரங்கமாக மிரட்டப்பட்டது கிடையாது. இது எந்த தனிநபருக்கானது அல்ல. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சுயமரியதை சம்பந்தப்பட்டதும்கூட மேலும் ஒரு ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் பிரதமர் பதவியின் கண்ணியம் பிணையமாக இருந்ததை ஏற்க முடியாது. அத்துடன் அதன் தலைவர்கள் இந்தியாவுக்காக நிற்கவும் முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.