ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கானது.. புதிய இந்தியாவிற்கானது.. பட்ஜெட்டை பாராட்டி தள்ளிய மோடி
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் இன்று தாக்கல் செய்யப்பட்டது புதிய இந்தியாவிற்கான புதிய பட்ஜெட் என்றார்.
மேலும் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்த பட்ஜெட் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் முன்னேற்றம் அடைவர். வளர்ச்சி பணிகள் இன்னும் வேகமெடுக்கும். மேலும் வரி அமைப்புகள் இன்னும் எளிமைப்படுத்தப்பட்டு, உட்கட்டமைப்பு நவீனமயமாக்கப்படும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. எனவே பட்ஜெட் குறித்து பெருமையடைவதாகவும் கூறினார் .
விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், புதிய திசையில் பயணிக்க வைக்கும் வகையிலான பட்ஜெட்டாகவும் உள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், இந்தியாவை புதிய உச்சத்திற்கு இட்டு சென்று மக்களை திருப்திப்படுத்தும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.