நரேந்திர மோடி 2.0... சமூக வலைதளப் பக்கங்களில் புதிய மாற்றம்
டெல்லி: பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்பு, தனது சமூக வலைதளப் பக்கங்களில் முகப்பு படத்தை மாற்றி புதிய படத்தை பதிவேற்றியுள்ளார்.
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.
கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போதும், கூட்டணி கட்சிகளையும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாஜக கூட்டணி அரசு அமைத்துள்ளது. பதவியேற்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
முகப்பு படம் மாற்றம்
மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பதவியேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது முகப்பு படத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
புதிதாக பதிவேற்றம்
மேலும் ட்விட்டர், முகநூல் பக்கங்களின் கவர் போட்டோக்களையும் மோடி அப்டேட் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட, டெல்லி தலைமை அலுவலகத்திற்கு திரண்டு வந்த தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி வணங்கும் புகைப்படம், சமூக வலைதளப்பக்கங்களில் புதிதாக பதிவேற்றப்பட்டுள்ளது.
சௌகிதார் மோடி
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்னாள் இருந்த சௌகிதார் என்ற வார்த்தையை நீக்கினார். அதுகுறித்து விளக்கமளித்து அவர் வெளியிட்ட பதிவில் , இந்திய நாட்டு மக்கள் காவலர்களாக சிறந்த சேவையை ஆற்றி உள்ளனர் என்றும்,
எப்போதும் இருக்கும்
இந்தியாவை சாதியம், மதவாதம், ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் இருந்து காப்பற்றுவதற்கான பலமான சின்னமாக சௌகிதார் உருவாகி உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், சௌகிதார் என்ற வார்த்தையை டுவிட்டரில் இருந்து நீக்கினாலும் அது தனக்குள் எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.