வலிமையான ஒருவர் வருகிறார்.. இன்னும் 2 நாட்களில் தேர்வு செய்யப்படும் புதிய காங்கிரஸ் தலைவர்?
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்னும் இரண்டு நாட்களில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
காங்கிரஸ் கட்சி, இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையில் தற்போது இருக்கிறது. முக்கியமாக கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் வயது காரணமாக காலமாவதும் வேறு சில முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர்வதும், மற்ற தலைவர்கள் அரசியலை விட்டு விலகுவதும் அக்கட்சியை முடக்கி போட்டுள்ளது.
முக்கிய லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேண்டாம்
லோக்சபா தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வந்த இரண்டே நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். எல்லோரும் இது ''சும்மா தொண்டர்களை சமாளிக்க'' என்றுதான் நினைத்தார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார்.
கிடையாது
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , நான் புதிய தலைவரை தேர்வு செய்ய மாட்டேன். கண்டிப்பாக என்னுடைய தலையீடு இதில் இருக்காது. காங்கிரஸ் கமிட்டிதான் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். நான் இதில் எந்த பொறுப்பும் வகிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
என்ன முடியாது
அதேபோல் காங்கிரஸ் தலைவராக நேரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் யாரும் வர மாட்டார்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. அதாவது பிரியங்கா காந்தி, அல்லது சோனியா காந்தி இருவரும் காங்கிரஸ் தலைவராக வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் யார் காங்கிரஸ் கட்சி தலைவராக வருவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
என்ன மீட்டிங்
அதன்படி வரும் ஜூலை 31ம் தேதி இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தலைமையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பும் ராகுல் காந்தியும் இதில் கலந்து கொள்வார்.
வலிமையான நபர்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போகும் இரண்டு அல்லது மூன்று நபர்களை முதற்கட்டமாக நாளை மறுநாள் தேர்வு செய்வார்கள். பின் இறுதியில் ஒருவரை தலைவராக தேர்வு செய்வார்கள் எனப்படுகிறது. பாஜகவை எதிர்க்கும் வலிமை கொண்ட இளம் தலைவர் ஒருவர் தலைவராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.