திடீர் திடீரென கரண்ட் கட்டானா, காசு தருவோம்.. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் புரட்சி அறிவிப்பு
டெல்லி: முன் அறிவிப்பில்லாமல் மின்வெட்டு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன் அறிவிப்பில்லாமல் ஏற்படும் மின்வெட்டுக்கு, தகுந்த இழப்பீடு வழங்கப்படும். முன் அறிவிப்பில்லாமல் 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் 50 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். 2 மணி நேரத்தைத் தாண்டினால் ரூ.100- ம் இழப்பீடு வழங்கப்படுமென முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை இழப்பீடுத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு பலரும் வரவேற்றுள்ளனர். இதற்கு தகுந்தாற்போல டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை மாற்றி அமைத்துள்ளது.
ஆளுநர் ஒப்புதல்
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவிலே முதல் மாநிலமாக முன் அறிவிப்பில்லாத மின்வெட்டுக்கு டெல்லி அரசு, இழப்பீடு வழங்கியுள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ஒப்புதல் அளித்துள்ளார்.
|
நிராகரிப்பு
மின்வெட்டுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் முன்னதாக ஆம்ஆத்மி கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால்,முறையான கையொப்பம் இல்லாததால் அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. இதுபோன்று அரசு எடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் முட்டுக்கட்டையாக இருக்கிறார் எனக் கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இழப்பீடு தொகை
மின்சார சட்டம் 2003 பிரிவு 108 னின் படி இழப்பீடு தொகை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இத் திட்டத்தைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
மின்மிகை மாநிலம்
மின்மிகை மாநிலமாக உருவாக்க அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.