கேரளா, மகாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா பரவல்.. கேஸ் கிடுகிடுவென அதிகரிக்க இது காரணமா?
டெல்லி: கோவிட் -19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 உருமாறிய வைரஸ்கள் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால் இரு மாநிலங்களில் சமீபத்திய கொரோனா கேஸ் அதிகரிப்புக்கும் உருமாறிய கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம் ) டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 55,752 கேஸ்களுடன் கேரளாவும், 54,306 செயலில் உள்ள கேஸ்களுடன் மகாராஷ்டிராவும் இந்தியாவின் மொத்த கேஸ்கள் எண்ணிக்கையில் 75 சதவீதமாக பங்களிப்புடன் உள்ளன.
இதுபற்றி வி.கே.பால் கூறுகையில், "உருமாறுவது வைரஸின் தன்மை. எனவே, அவ்வாறு மாறியுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் N440K (இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் காணப்படும் உருமாற்றங்களில் ஒன்று) மற்றும் E484K (ஐரோப்பிய உருமாற்றம்) கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆனால் வெறும் கண்டறிதல் மட்டும் போதாது. வைரஸ் நோய் பரவும் வேகத்தை அதிகரித்துள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவ தகவல்கள் இணைக்கப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
கேரளா, மகாராஷ்டிராவில் கேஸ்கள் அதிகரிக்க இவை காரணமா என்பதை அறிவியல் தகவல்களின் அடிப்படையில் நமக்கு உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை.
குட் நியூஸ்... 60 வயதைக் கடந்தவர்களுக்கு.. மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி வரை, 1,17,54,788 கோடி கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுக்க போடப்பட்டுள்ளன. ராஜஸ்தான் (75.8 சதவீதம்), இமாச்சல பிரதேசம் (76.2 சதவீதம்) மற்றும் உத்தரபிரதேசம் (76.2 சதவீதம்) ஆகியவை சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடுவதில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.
தமிழ்நாடு (52.1 சதவீதம்), பஞ்சாப் (39 சதவீதம்), டெல்லி (51.6 சதவீதம்) என்ற அளவில் தடுப்பூசி போடுவதில் தொடர்ந்து பின்தங்கியுள்ளன.