எந்த பாகுபாடும் இல்லாத.. சமத்துவமான கொள்கை.. புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி பேச்சு!
டெல்லி: புதிய கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை. பாகுபாடு இல்லாத சமத்துவமான கல்வியாக இது உருவாக்கப்பட்டு உள்ளது, என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
நாடு முழுக்க தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. இதன் மூலம் கல்வித்துறையில் நிறைய சீர்திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை மூலம் உயர் கல்வி சீர்திருத்தங்கள் என்ற மாநாட்டில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். புதிய கல்விக்கொள்கை குறித்து அவர் இந்த மாநாட்டில் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
புதிய கல்வி கொள்கை மாற்றத்துக்கான முதன்மை கருவி: பிரதமர் மோடி
என்ன சொன்னார்
பிரதமர் மோடி தனது உரையில் தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி. சீர்திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே கல்வித்துறை மாறும்.மாணவர்கள் பயன் அடைவார்கள். மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர் புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது. அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டபிறகே புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவகாசம்
இது தொடர்பாக கருத்து கூற போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை. பாகுபாடு இல்லாத சமத்துவமான கல்வியாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.நமது மாணவர்களை சர்வதேச குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. நமது மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சர்வதேச மதிப்பீடுகளுடன் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
வலிமை முக்கியம்
வலிமை மிக்க தேசமாக இந்தியா உருவாக புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். நாட்டை முன்னேற்ற பாதைக்கு இது கொண்டு செல்லும். விவாதித்தல், ஆராய்தல் அடிப்படையிலானதுதான் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆராய்ச்சி திறனை இது ஊக்குவிக்கிறது. உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பும் படிப்புகளை படிக்க புதிய கல்வி கொள்கை உதவும்.
சிந்தனை முக்கியம்
நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை கற்றுத்தருகிறது புதிய கல்வி கொள்கை. தாய் மொழிக்கு இந்த கல்விக் கொள்கை முக்கியத்துவம் கொடுக்கிறது. தாய்மொழியில் கல்வி கற்றால் மாணவர்கள் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.