எப்படி யோசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: புதிய கல்விக்கொள்கை நீங்கள் எப்படி யோசிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கையின் கீழ் "உயர் கல்வியில் மாறும் சீர்திருத்தங்கள்" என்ற பெயரிலான மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: முந்தைய கல்விக்கொள்கை நீங்கள் எதை யோசிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது. ஆனால் புதிய கல்விக்கொள்கை நீங்கள் எப்படி யோசிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இது மிகவும் முக்கியமான வித்தியாசம் ஆகும்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்களும், பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. பெரும்பான்மையாக இந்த கல்விக் கொள்கை வரவேற்கப்படுகிறது. இந்த கல்விக் கொள்கை ஒரு சார்புடையது என்று யாருமே சொல்லவில்லை. இது ஒரு நல்ல அறிகுறியாகும். தற்போது இந்த கல்விக் கொள்கையை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றிதான் அனைவரது கவனமும் செல்கிறது.
10+2 கிடையாது.. இனி 5+3+3+4 கல்விமுறை.. சர்வதேச தரத்தில் புதிய கல்விக்கொள்கை.. மோடி பெருமிதம்!
ஆழ்ந்த புரிதல்கள்
தாய்மொழியில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும்போது, அந்த பாடத்தில் ஆழ்ந்த புரிதல் மாணவர்களுக்கு ஏற்படும். எனவே ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வியில் கட்டாயம் என்று புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படுகிறது. படிக்கும் பாடத்தை புரிந்து கொண்டால், அவர்களின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான அடித்தளமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. வாய்ப்புகளை எளிதாக கண்டறிய இது உதவும். ஒரு தனிநபர் ஒரே தொழிலில் வாழ்க்கை முழுக்க இருக்க முடியாது என்ற கால கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, ஒவ்வொருவரும் பல துறைகளில் வல்லவர்களாக மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
நல்ல மனிதர்கள்
"கல்வியின் நோக்கம் என்பது நல்ல மனிதர்களை உருவாக்குவது.. அவர்களுக்கு திறமையை கொடுப்பது" என்று சொல்வார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அந்தவகையில் மாணவர்களை வார்த்தெடுக்கும் பணி ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு தொழில் அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் பங்கு தேசிய கல்விக் கொள்கைக்கும் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
விமர்சனங்கள்
அதேநேரம் மும்மொழி பாடம் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். தாய் மொழி கட்டாயம் என்ற ஷரத்துக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி பணி இடமாற்றம் பெற்றுச் செல்லக் கூடிய பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழிக் கல்வி கற்பது தங்கள் குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள். இருப்பினும் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் பற்றி மோடி தனது உரையில் குறிப்பிடவில்லை. பெரும்பாலானோர் இதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.