1000 பேருக்கு ஒரு மருத்துவர் இலக்கை எட்ட மத்திய அரசு தீவிரம்.. உருவாகிறது புதிய மருத்துவ கல்லூரிகள்
டெல்லி: நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை, மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதார துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக சுகாதார நிறுவன பரிந்துரைப்படி, 1000 பேருக்கு ஒரு மருத்துவர் வீதம் நாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பில் 1,953 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே உள்ளது.
எனவே வரும் 2027-ம் ஆண்டுக்குள் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவ கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே முதல்கட்டமாக 58 மாவட்ட மருத்துவமனைகளையும், இரண்டாம் கட்டமாக 24 மாவட்ட மருத்துமனைகளைம் மருத்துவ கல்லூரிகளாக மாற்றும் துவக்க நிலை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் கட்ட பணிக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. இரண்டாம் கட்டமாக 24 மருத்துவமனைகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது கட்டமாக, மருத்துவர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த மூன்று கட்ட திட்டங்களின் படி, ஒவ்வொரு மருத்துவமனையையும் மருத்துவ கல்லூரிகளாக தரம் உயர்த்த தலா ரூ.325 கோடி செலவாகும் என்பதால், இத்திட்டம் நிதி கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன.
நிதி கமிட்டியின் ஒப்புதலை பெற்ற பிறகு, மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்றும் எஞ்சிய திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டெல்லி வட்டாரம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல்கள் போல அதிகரித்து வருகின்றன.
இதனால் ஏழை மாணவர்கள் மருத்து படிப்புகளில் சேருவது எளிதானதாக இல்லை. எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்டுமானால், தேர்தலின்போது மக்களுக்கு பாஜ அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேறும் என்றும் குறிப்பிட்டனர்.
தற்போது தீட்டப்பட்டுள்ள மூன்று கட்ட திட்டங்கள் மூலம் மொத்தம் 157 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாகி, புதிதாக 10,000 எம்பிபிஎஸ் இடங்களும் 8,000 முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.