இனி கண்டதையும் காட்ட முடியாது.. ஓடிடி-க்கு வரும் புது ஆப்பு - மத்திய அமைச்சர்
டெல்லி: ஓடிடி.,யில் வெளியாகும் தொடர்கள் மற்றும் படங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சினிமா உலகமே முடங்கிக் கிடந்த சூழலில், மெல்ல மெல்ல தியேட்டர்கள் திறக்கப்பட்டு, இன்று மக்கள் அச்சமின்றி வெளியே வரும் சூழலை விஜய்யின் மாஸ்டர் வெற்றி உருவாக்கியுள்ளது.
அதேசமயம், முன்னணி நடிகர்களின் படங்கள் பல ஓடிடி-யில் வெளியாகும் கலாச்சாரமும் உருவாகியுள்ளது. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முன்னணி ஹீரோக்களின் தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி-யில் விற்று லாபம் பார்த்துள்ளனர்.
ஒருபக்கம் அது ஆரோக்கியமான போக்கு என்றாலும், தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ஓடிடி-யைப் பொறுத்தவரை இங்கு சென்சார் என்பதே கிடையாது. அடல்ட் காட்சிகள் எல்லை மாறுவதை பல வெப் சீரிஸ்கள் வாயிலாக நாம் காண முடிந்தது.
நேபாளத்தை அச்சறுத்தும் பறவை காய்ச்சல்... 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு!
குறிப்பாக, அமேசான் பிரைமில் வெளியான மிர்சாபூர், தாண்டவ் ஆகிய வெப் சீரிஸ்கள் மத நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சைகள் கிளம்பின. அதிலும் தாண்டவ் வெப் சீரிஸ்-க்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரையரங்குகளில் நாளை (பிப்.,01) முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயமாகிறது. தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும்.
ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.