வெளிநாட்டு வாழ் இந்தியர்களே.. 8ம் தேதி முதல் இந்தியா வர.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!
டெல்லி: வரும் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா வழிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டப்படி விமானங்களை கடந்த மே 7ம் தேதி முதல் இயங்கி வருகிறது. இதுவரை பல்லாயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் அழைத்து வரப்பட உள்ளனர்.
இந்நிலையில் வரும் வரும் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா வழிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
என் மகனுக்காக உதவினேன்.. 61 பேரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தந்தை.. உருக வைக்கும் கதை
72 மணி நேரம் முன்பு
அதன்படி பயணத்தை துவங்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக (www.newdelhiairport.in) என்ற இணையதளத்தில் சுயஅறிவிப்பு படிவத்தை நிரப்பி பதிவேற்றம் செய்ய வேண்டும். 7 நாட்கள் தமது சொந்த செலவில் ஹோட்டல் குவாரன்டைனும், அதற்கு அடுத்த 7 நாட்கள் வீட்டுத் தனிமையிலும் இருக்க சம்மதம் என உறுதி அளிக்க வேண்டும்.
வீட்டு தனிமை
கர்ப்பிணி, குடும்பத்தில் மரணம், கவலைக்கிடமான உடல்நிலை, 10 வயதிற்கு குறைவான குழந்தைகளின் பெற்றோர் -ஆகிய காரணங்களுக்கு மட்டும் நேரடியாக 14 நாட்கள் வீட்டு குவாரன்டைன் அனுமதிக்கப்படும். தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் விதிவிலக்கு கோரும் பட்டியலில் இருப்போர் 72 மணிநேரத்துக்கு முன்பே, சுயவிவரம் தாக்கல் செய்யும்போது அதைக் குறிப்பிட வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.
மருத்துவ சான்றிதழ்
தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் விதிவிலக்கு கோரும் காரணம் உண்மைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். பொய்யானதாக இருந்தால், அது கிரிமினல் குற்றமாகக் கருதி சம்பந்தப்பட்ட பயணி மீது சட்ட நடவடிக்கை பாயும்.
என்ன செய்யலாம்
பயணிகள் விமானத்தில் ஏறும்போது டிக்கெட்டுடன் சேர்த்து செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்த கையேடு வழங்கப்படும். விமானத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து விவரங்களைக் குறிப்பிட வேண்டும். விமானம் அல்லது கப்பலில் புறப்படும் முன் பயணிகளுக்கு தெர்மல் பரிசோதனை நடத்தப்படும்போது கொரோனா அறிகுறியில்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.மற்ற நாடுகளில் இருந்து நில எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கும் இதே வழிமுறை பின்பற்றப்படும்.
சுயவிவர குறிப்பு
விமான நிலையத்தில் சானிடைசிங் வசதி, கிருமிநாசினி தெளித்தல் போன்றவை உறுதி செய்யப்படும். பயணிகள் விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும் இணையதளத்தில் விண்ணப்பிக்கம் விவரக் குறிப்பை தாக்கல் செய்ய முடியாத பயணிகளுக்கு விமான நிலையத்தில் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.
சானிடைசர் வழங்கப்படும்
விமான நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் குறித்து பயணிகளுக்கு முறைப்படி அறிவிக்கப்படும். விமானத்தில் அல்லது கப்பலில் பயணிக்கும்போது பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். விமானத்தில் பயணிகளுக்குத் தேவைப்பட்டால் அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்ய சானிடைசர் தரப்பபடும்.
சுயவிவரக் குறிப்பு
இந்திய நகரங்களில் விமானத்தில் வந்து இறங்கும்போது, பயணிகள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.
விமானப் பயணம் புறப்படுவதற்கு முன் நிரப்பிய சுயவிவரக் குறிப்பின் நகலை, விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் அல்லது ஆன்லைனில் பதிவிட்டிருந்தால் அதைக் காண்பிக்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சை
பயணிகள் பரிசோதிக்கப்படும்போது கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தெர்மல் ஸ்கேனிங் முடிந்தபின், பணம் செலுத்தி தனிமை முகாமுக்குச் செல்வதில் இருந்து விலக்கு பெற்ற பயணிகள் மட்டும் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளிடம் சுய விவரங்கள், ஊர், மாவட்டம், செல்போன் எண், முகவரி ஆகியவற்றைத் தெரிவித்து வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.