கொலிஜியம் சர்ச்சை நடுவே.. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா நாளை பதவியேற்பு
டெல்லி: நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாளை காலை பதவியேற்றுக் கொள்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 பேர் நீதிபதிகளாக பதவி வகிக்கலாம், ஆனால் தற்போது 26 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
இதையடுத்து கடந்த 10- ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் கூட்டத்தில், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சஞ்சிவ் கண்ணா, தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை நியமனம் செய்துள்ள கொலீஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கைலாஷ் காம்பீர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.