புதிய தேசிய கல்விக் கொள்கை...மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இந்தி கட்டாயமா?
டெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் இனி மத்திய கல்வித்துறை என்று மாற்றப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இம்மாதம் ஜூலை 31ஆம் தேதி வரை புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்த நிலையில் இன்று திடீரென ஒப்புதல் வழங்கி இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை... கொரோனா கெடுபிடிகளால்... குர்பானி ஆடுகள் விற்பனை மந்தம்
மும்மொழியில் கல்வி
மத்திய அரசு அறிவித்து இருந்த புதிய தேசியக் கல்வி இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு மக்களிடம் 30 நாள்களுக்குள் கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜூலை 31 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது.
நடிகை ஜோதிகா எதிர்ப்பு
இந்தக் கல்வி கொள்கைக்கு நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது விவாதப் பொருளாக மாறி இருந்தது. இதுகுறித்து பேசி இருந்த சூர்யா, ''புதிய கல்விக் கொள்கை 30 கோடி மாணவர்களுக்கானது. கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என்று கூறுவது நியாயம் இல்லை. அவர்கள் மீது மூன்று மொழிகளை திணிப்பது ஆபத்தானது. இன்று 30% மாணவர்கள் ஆசிரியரே இல்லாமல் தான் தேர்வு எழுத செல்கின்றனர்'' என்று பேசி இருந்தார்.
மழலையர் கல்வி
மழலையர் கல்விக்கென்று இதுவரை சிறப்பு திட்டங்கள் இல்லை . ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கையில், 3 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 வயது முதல் 8 வயது வரையிலான கல்வி முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மழலையர் உயர்நிலைக் கல்வி
6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அளித்து வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை, மழலையர் கல்வி, உயர்நிலைக் கல்வியை உள்ளடக்கி பரிந்துரைக்கிறது. 3 முதல் 18 வரையுள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
ஐந்தாண்டு மூன்றாண்டு கல்வி
வளர்ந்து வரும் கல்விக்கு ஏற்ப பள்ளிக் கல்வி அமைப்பில் மாற்றங்களை செய்யவும் பரிந்துரைத்துள்ளது. 5-3-3-4 என்ற புதிய கல்வி அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு அடிப்படைக் கல்வி, மூன்றாண்டு ஆயத்தக் கல்வி, நடுநிலைக் கல்வி, நான்காண்டு உயர்நிலைக் கல்வி என்று மாற்றப்படுகிறது.
தேர்வு முறைகளில் மாற்றம்
மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பீடு செய்ய, 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாநில அளவிலான மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்தப் பரிந்துரைக்கிறது. தேர்வு முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளது. மாணவர்களுக்குத் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்கிறது புதிய வரைவு கல்விக் கொள்கை.
2035-ம் ஆண்டுக்குள் அதிகரிப்பு
உயர் கல்வித் துறை பற்றிய அனைத்திந்தியக் கணக்கெடுப்பின்படி, உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை 2017-18-ம் ஆண்டில் 25.8% உள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், உயர் வகுப்பில் சேருவது குறைவாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 2035-ம் ஆண்டுக்குள் உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி அதிகாரம்
தற்போது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலானது (என்ஏசிசி) பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் வருகிறது. இதை அதில் இருந்து பிரித்து, தனி அமைப்பாகப் பிரித்து தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் 2030-ம் ஆண்டுக்குள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
இந்திக்கு எதிர்ப்பு
இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி, ஆங்கிலம் தவிர இந்தி உள்பட மும்மொழி திட்டம் பரிந்துரைத்தது. இந்த திட்டத்தில் தான் தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், கட்டாயம் என்பது, விருப்பம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.