நாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்காக நாடாளுமன்ற வளாகத்திலிருந்த காந்தி சிலை திடீரென்று அகற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியுள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அங்கிருக்கும் காந்தி சிலை. மகாத்மா காந்தி தியானம் செய்வது போல வடிக்கப்பட்டுள்ள இச்சிலை, முழுக்க முழுக்க வெண்கலத்தால் ஆனது. ராம் சுதர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இச்சிலை, அப்போதைய குடியரசுத் தலைவர் ஷங்கர் தயால் சர்மாவால் 1993ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்தச் சிலைக்கு முன்தான் போராடுவார்கள். கடந்த அக்டோபர் மாதம் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சி எம்பிகள் இந்த இடத்தில்தான் தங்கள் போராட்டத்தை நடத்தினர்.
சென்ட்ரல் விஸ்டா திட்டம்
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இட நெருக்கடி இருப்பதால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் முன் அமையவிருக்கும் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
காந்தி சிலை அகற்றம்
கடந்த ஜனவரி 15ஆம் தேதி இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக நாடாளுமன்ற வளாகத்திலிருந்த காந்தி சிலை திடீரென்று அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி சிலை திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டது ஆச்சரியம் அளிப்பதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை எளிதில் மேற்கொள்ள வசதியாக இந்தச் சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திட்டமிட்ட தேதிக்கு முன்னரே அகற்றம்
வரும் ஜனவரி 29 ஆம் தேதி பட்ஜெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் அமர்வுக்கு இடையே உள்ள ஒரு மாத இடைவெளியில்தான் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் காந்தி சிலை திட்டமிட்ட தேதிக்கு முன்னரே இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட திட்டம்
காந்தி சிலையை பொதுப்பணித் துறையினர் மிகக் கவனமாகச் சபாநாயகர் தனது அலுவலகத்தை அடையப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தும் வாயிலுக்கு அருகிலே வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முன்னாள் உள் துறை அமைச்சர் கோவிந்த் பல்லப் பந்தின் சிலை உள்ள இடத்தில் காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. கோவிந்த் பல்லப் பந்தின் சிலை டெல்லியிலுள்ள பான்ட் மார்க் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.