நம்பவே முடியலையே.. இவர்தானா உமர் அப்துல்லா? அடர் தாடியுடன் 2-வது போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புதிய போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கியது.
மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்க்கணக்கானோர் விசாரணைகள் இன்றி சிறைகளிலும் வீட்டு காவல்களிலும் அடைக்கப்பட்டனர். 6 மாதங்களுக்குப் பலர் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் ஜம்மு காஷ்மீரின் அரசியல் அடையாளங்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். உமர் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி அவரது சகோதரி உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார்.
இம்மனு மீது வரும் 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடர்ந்த தாடியுடன் உமர் அப்துல்லா, மருத்துவர் ஒருவருடன் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தபடம் எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஏற்கனவே இதேபோல் தாடியுடன் உமர் அப்துல்லா இருக்கும் படத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிர்ச்சியுடன் வெளியிட்டிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த படத்தை பகிர்ந்து. உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.