"சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்.." மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: சமூக வலை தளங்களில் உள்ள பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் செல்வாக்குடன் திகழ்பவர்கள் மற்றும் கணினி வழியேயான கதாபாத்திரங்களை வெளியிடுவோர் ஆகியோருக்காக, மத்திய நுகர்வோர் விவகார துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த புதிய விதிகளை பின்பற்ற மறுத்தால் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்களிடையே டிவி பார்க்கும் ஆர்வம் கூட குறைந்து விட்டதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கிறது. ஏறத்தாழ அனைவரது கைகளிலும் ஆறாம் விரலை போல செல்போன்கள் தவழ தொடங்கிவிட்டன.
மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இணையம் மூலமாக தெரிந்து கொள்வது.. எளிதாக யாரையும் தொடர்பு கொள்ள முடிவது என இணையம் அளிக்கும் வசதிகளும் பெருகிவிட்டன. அதேபோல சமூக வலைத்தளங்களில் தற்போது பல்வேறு தகவல்களை வெளியிடுவது, தங்களின் படைப்புகளை பதிவிடுவது என பலரும் அதை பயனுள்ள வகையிலும் பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைத்தளம்
இதனால், சமூக வலைத்தளங்களால் பலரும் எளிதாக பிரபலம் அடையவும் முடிகிறது. சுவாரசியமான தகவல்களை பகிரும் நபர்கள்.. தங்கள் நடனத்திறமையை வெளிப்படுத்தி வீடியோக்கள் பதிவிடுபவர்கள் என பலரும் தங்கள் திறமயை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதனால், பிரபலம் அடைவதோடு வருவாய் ஈட்டவும் முடிகிறது. இது ஒருபக்கம் என்றால் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் குறிப்பிட்ட பொருள்களை பார்த்து விளம்பரப்படுத்தவும் செய்கின்றனர்.
நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில்
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் நுகர்வோரின் நலனை பாதுகாக்கவும், தவறான வழிகாட்டும் வகையிலான விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகளை வெளியிட்டு, நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில், "மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் வரம்புக்கு உட்பட்டு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள், முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறாக வழிநடத்த கூடிய விளம்பரங்கள் ஆகியவற்றில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட உள்ளன" என்றார்.
ரூ.50 லட்சம் வரை அபராதம்
இந்த விதிகளை மீறி செயல்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் தண்டனை அளிக்கப்படும். இந்த விதிகளின் படி, தயாரிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அவற்றை ஊக்குவிப்போருக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் அபராதம் விதிக்க முடியும். குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடைபெற்றால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
சமூக வலைத்தள பிரபலங்கள் ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள், பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது அது தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். அதாவது சலுகைகள் மற்றும் பெற்ற விருதுகள் ஆகிய விவரங்களை வெளியிட வேண்டும். அதேபோன்று பரிசுகள், ஓட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் நலன் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிடுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லைவ் நிகழ்ச்சியாக இருந்தாலும்..
இந்த விவரங்கள் எளிதில் புரியக்கூடிய மற்றும் தெளிவான மொழியில் இடம்பெற வேண்டும். லைவ் நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை பின்பற்ற தவறினால் அந்த விளம்பரங்கள், செய்திகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.