இதுதான் சாமானியர்களுக்கு, மத்திய அரசின் புத்தாண்டு பரிசா? சீறும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: ரயில்வே கட்டண உயர்வு மற்றும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது சாமானிய மக்களை ஆழ்ந்த நிதிச் சிக்கலுக்கு உள்ளாக்கும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் இதுபற்றி கூறுகையில், பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் நேரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த பரிதாப நிலை எப்போதுதான் முடிவடையும் என்பதே இப்போதுள்ள கேள்வி.
இந்த கட்டண உயர்வு ஏழை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி. இது சாமானியர்களுக்கான பாஜக அரசின் புத்தாண்டு பரிசா? காங்கிரஸ் கட்சி அப்படி நினைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் ரயில் கட்டண உயர்வு மற்றும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்வு பற்றி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
தற்காலிக ஆசிரியர் நியமனம்.. அண்ணா பல்கலை. அறிவிப்புக்கு ஹைகோர்ட் அதிரடி தடை
ரயில் பயணிகள் கட்டண உயர்வுக்குப் பிறகு, காஸ் சிலிண்டர் விலையையும், அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரங்கள் மீது, மோடி அரசு மற்றொரு தாக்குதலை தொடுத்துள்ளது. புத்தாண்டை, மோடி அரசு இப்படி வரவேற்றுள்ளது. வேலை இழப்புக்கள், உணவு விலை பணவீக்கம் மற்றும் கிராமப்புற ஊதியங்களின், வீழ்ச்சி ஆகியவற்றுக்கு, நடுவே, இவ்வாறு விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
ரயில் கட்டணம், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா முதல் நான்கு பைசாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர்கள், சிலிண்டருக்கு ரூ. 19 உயர்த்தப்பட்டுள்ளது.