நீட் தேர்வு ரத்தாகிறது?... முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்த திட்டம்
டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு 1.5 லட்சம் எம் பி பி எஸ் மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில், எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டில் NEXT (NATIONAL EXIT TEST) தேர்வை நடத்தி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
எம்.பி.பி.எஸ் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் National Exit Test எனப்படும் நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கிட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்தாண்டில் இந்த தேர்வை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந்தியாவில் இளநிலை மருத்தவப்பட்ட படிப்பு ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பிறகு ஓராண்டு கால பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர். இதனையடுத்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுவது தற்போதைய நடைமுறை ஆகும்.
இதுவே வெளிநாட்டில் இருந்து மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைக்கு வந்தால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.