அடுத்த கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. ஆனால் அனைவருக்கும் இலவசம் இல்லை
டெல்லி: அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்த முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே இலவசமாக தடுப்பூசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 16ஆம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
50 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி
இந்நிலையில், அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதியவர்கள் தங்கள் வாக்களிக்கும் மாநிலங்கள் அல்லாமல் விரும்பும் மாநிலங்களில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம்.
இலவசம் இல்லை
இந்தப் பிரிவு இரண்டு வகையாகப் பிரிக்கப்படுவதாகவும் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாரெல்லாம் தடுப்பூசியை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்ற தகவலை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் மற்றவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளப் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோ-வின் செயலி
கோ-வின் செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் அந்தச் செயலியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகியவற்றில் இந்த தகவல்கள் சரி பார்க்கப்படும். அதன் பின்னரே அவர்களால் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும்.
மத்திய அரசு அறிவுறுத்தல்
அடுத்தகட்டமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதால், அவற்றைப் பத்திரமாக வைக்கப் புதிதாக 60 சேமிப்பு இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களிலிருந்து நாட்டிலுள்ள எந்தப் பகுதிக்கும் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல முடியும். மேலும், அதிக நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த வேண்டும் என்பதால் மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.