பொதுநலனுக்காக என்ஜிஓக்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை, அரசு தடுக்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: தங்களது உரிமைக்காக போராடக்கூடிய பொது மக்களுக்கு உதவி செய்யும் என்ஜிஓ போன்ற அமைப்புகளுக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதியை அரசு தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் ரீதியான திட்டம் இல்லாமல், பொது நலனுக்காக உதவி செய்யக்கூடிய அமைப்புகள் மீதும், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் அமைப்புகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், நீதிமன்றம் அழுத்தந்திருத்தமாக தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் வடிவமைக்கப்பட்ட இரண்டு சர்ச்சைக்குரிய விதிகளை நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
விதி 3 (வி) இன் கீழ், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நேரடியாக இணைக்கப்படாத.. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் போன்ற அமைப்புகள், அரசியல் நலன் நோக்கங்களுடன் செயல்பட்டால், வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தப்படலாம் என்று கூறுகிறது.
இதேபோல், விதி 3 (vi) எந்தவொரு அமைப்பும், 'பந்த்' அல்லது 'ஹர்த்தால்', 'சாலை மறியல், 'ரயில் மறியல்' அல்லது 'ஜெயில் நிரப்பும் போராட்டம்' போன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த அமைப்புக்கும், வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதி கிடைப்பதை அரசு தடுக்க முடியும்.
இந்திய சமூக நடவடிக்கை மன்றம் (ஐஎன்எஸ்ஏஎஃப்) அமைப்பு இந்த விதிமுறைகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை சட்டம் மீறுவதாக சுட்டிக்காட்டி, சிவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை ஏற்படுத்த கற்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கான வெளிநாட்டு நிதியை தடுக்க முடியாது என்று இந்த அமைப்பு வழக்கில் தெரிவித்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலில் இந்த என்ஜிஓ மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அது சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருந்தது.
இந்த, தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், வெளிநாட்டு நிதியை பெறுவதில் ஒரு அமைப்பின் உரிமையை நசுக்குவதன் மூலம், அரசியலமைப்பின் ஆர்டிகிள் 19 (1) (அ) மற்றும் 19 (1) (சி) ஆகியவற்றின் கீழ், சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் அமைதியான போராட்டங்கள் தொடர்பாக, அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், அரசியல் குறிக்கோள் இல்லாமல், சட்டத்திற்கு உட்பட்டு, குடிமக்கள் குழு தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை ஆதரிக்கும் எந்தவொரு அமைப்பு மீதும் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியது.