சென்னை நீர்நிலைகளை ஏன் பராமரிக்கல… ரூ.100 கோடி அபராதம்.. தமிழக அரசு அதிர்ச்சி
டெல்லி:பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு நீர்நிலைகளை பராமரிக்க தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசிற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து, அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2014-15ம் ஆண்டு... அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னையில் ஓடும் நீர்வழித் தடங்களான கூவத்தை முழுவதுமாக சீரமைக்க பெரும் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவித்திருந்தார். 1,646 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 604 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டாலும், பணிகள் சரிவர நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்பட்டு நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக கழிவுநீர் பூமிக்குள்ளும், நீர்வழித் தடங்களிலும் விடப்பட்டு, நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் மாசடைந்து வருகிறது.
இது தொடர்பாக திருவான்மியூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் வழக்கறிஞர் கூட இல்லாமல் மனுதாரராக இருந்து மட்டுமே வாதாடினார்.வழக்கில், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை அகலப் படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்வெளியேற்று நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால்... அறிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:சுற்றுச்சூழலை குடிமக்களுக்கு அளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது.
ஆனால் அதில் இருந்து தமிழக அரசு தவறி விட்டது என்பதை அடையாறு, கூவம், பங்கிங்ஹாம் கால்வாய் விவகாரங்கள் தெளிவாக காட்டுகிறது. இது தொடர்பாக கால வரையறைக்குட்பட்ட செயல் திட்டத்தை பொதுப்பணித்துறை வகுக்க வேண்டும்.
அந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும்.
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறப்பு குழுவை நியமித்து தேசிய என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.