நச்சுப்புகை.. பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு 100 கோடி அபராதம்..தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
Recommended Video
டெல்லி: பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான போக்ஸ்வேகன் (Volkswagen) சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக புகாரின்பேரில், அந்த நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
போக்ஸ்வேகன் கார்கள் அளவுக்கு அதிகமான நைட்ரஸ் ஆக்சைடை வெளியிடுவதாக புகார் எழுந்தது. போக்ஸ்வேகன் மீது டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சத்விந்தர் சிங் என்பவரால் புகார் அளிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்டதைவிட, 40 மடங்கு அதிக நைட்ரஸ் ஆக்ஸைடை வெளியிடுவதாக அதில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு நிபுணத்துவ குழுவை அமைத்தது. இந்த ஆய்வு மதிப்பீட்டிற்கு டெல்லி அடிப்படை நகரமாக எடுக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பரில், அக்குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், போக்ஸ்வேகன் சுற்றுச்சூழல் விதிகளை மீறி மாசு வெளியிடுவதாகவும், அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை மாலை 5 மணிக்குள் போக்ஸ்வேகன் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.
அப்படி அபராதம் செலுத்த தவறினால் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனரை கைது செய்ய வேண்டியிருக்கும். அத்துடன் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் கடுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.