புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி கைது.. பாக். எதிராக ஆதாரங்கள் சிக்கின!
டெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை புலனாய்வு போலீஸ் நேற்று கைது செய்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் தற்கொலை தாக்குதலை நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை நேற்று இரவு தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்கொலை படை தாக்குதல்
இதுதொடர்பாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹஜிபல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாகிர் பஷீர் மாக்ரே (22). இவர் மரச்சாமான்கள் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய அடில் அகமது தாருக்கு புகலிடம் கொடுத்துள்ளார்.
உதவி
2018-ஆம் ஆண்டே மாக்ரேவை பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது உமர் ஃபரூக் அடில் அகமது தாருக்கு அறிமுகம் செய்துள்ளார். அதன் பிறகு மாக்ரே ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு முழு நேரம் மறைமுகமாக உதவி செய்து வந்தார். ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், பணம் ஆகியன கிடைப்பதற்கு மாக்ரே உதவி புரிந்துள்ளார்.
வீட்டில் அடைக்கலம்
அவர் உதவியவர்களில் புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் அடங்குவர். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா தாக்குதல் நடத்தப்படும் வரை அடில், உமர் ஃபரூக் ஆகியோரை மாக்ரே தனது வீட்டில் வைத்துள்ளார். அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்கும் உதவியுள்ளது தெரியவந்துள்ளது.
புல்வாமா தாக்குதல்
மாக்ரேவின் மரச்சாமான் கடை ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி லேத்போரா பாலத்தில் இருப்பதால் சிஆர்பிஎஃப் வீரர்களின் கண்காணிக்கும் பணி மாக்ரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்காணித்து தகவல்களை அடில் அகமதுவுக்கும் ஃபரூக்கிற்கும் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் வடிவமைப்பை மாற்றி அதில் வெடிகுண்டை பொருத்தவும் மாக்ரே உதவியுள்ளது தெரியவந்ததாக என்ஐஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு செய்வது எப்படி
கைது செய்யப்பட்ட மாக்ரே என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மாக்ரேவின் போனில் பயங்கரவாத சதிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் கமான்டர் ஓமரின் போன் நம்பரும் காணப்படுகிறது. அதில் ஆர்டிஎக்ஸை வைத்து வெடிகுண்டை தயார் செய்வது எப்படி என்பது குறித்த வீடியோவும் இடம்பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து வெடிபொருட்கள் வந்துள்ளதற்கான ஆதாரம் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.