போராடும் விவசாய சங்க தலைவருக்கு சம்மன் அனுப்பிய என்ஐஏ.. முறியடிக்க "சதி" என புகார்!
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் போராடி வரும் விவசாயச் சங்க தலைவர் பால்தேவ் சிங்கி, பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகத் தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், மத்திய அரசின் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள விவசாயிகள், போராட்டத்தைக் கலைக்க மத்திய அரசு இவ்வாறு கூறுவதாகக் குற்றஞ்சாட்டினர்.
விவசாய தலைவருக்குச் சம்மன்
இந்நிலையில், தடை செய்யப்பட்டுள்ள சிக்ஹ்ஸ் ஃபோர் ஜஸ்டிஸ் அமைப்பு நாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளித்தது தொடர்பான வழக்கில் பால்தேவ் சிங்கை விசாரணைக்கு ஆஜராக தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 26ஆம் தேதி தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், விவசாயச் சங்கத் தலைவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால்தேவ் சிங்
டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் லோக் பாலை லேன்சப் வெல்ஃபேர் அமைப்பின் தலைவர்தான் பால்தேவ் சிங். பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சாட்சியாக பால்தேவ் சிங் பெயர் பதியப்பட்டுள்ளதாகவும், அவர் நாளை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நிதி அளித்த வழக்கு
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளித்தது தொடர்பான வழக்கைத் தேசிய புலனாய்வு முகமை தற்போது விசாரணை செய்து வருகின்றனர். அவ்வாறு நிதி உதவி பெற்ற தொண்டு நிறுவனங்களின் பெயர்களைத் தேசிய புலனாய்வு முகமை பட்டியலிட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது விசாரணை நடைபெறுகிறது.
தூதரகங்கள் முன் போராட்டம்
சமீப காலங்களாக அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தடை செய்யப்பட்ட காலிஸ்தானிய அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்
ஆலோசனைக் கூட்டம்
முன்னதாக, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தலைமையில் என்ஐஏ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நிதி அளிப்பது தொடர்பான வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.