தூக்கு தண்டனை நிறைவேறாது.. தம்பட்டம் அடிக்கிறார் குற்றவாளிகளின் வக்கீல்.. நிர்பயா தாயார் கதறல்!
டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை மீண்டும் ஒரு முறை தள்ளிப்போனதால் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், தூக்கு தண்டனை ஒரு போதும் நிறைவேறாது என தற்பெருமை காட்டியாதாக வேதனை தெரிவித்தார்
2012 டிசம்பரில் நிர்பயா என்று மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
தண்டனை உறுதி
இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்ககப்பட்டது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கருணை மனு
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி டத் வாரண்ட் ( தூக்கிலிடும் தேதி) பிறப்பிக்கப்பட்டது. அப்போது முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் செய்த காரணத்தால் தள்ளிப்போனது. அவரது கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
வினய் சர்மா மனு
இதற்கிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு கருணை மனுவை காரணம் காட்டி பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு டத் வாரண்டை டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த சூழலில் தூக்கு தண்டனையை தள்ளிப்போட பல மனுக்களை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே இரண்டு நாளைக்கு முன்பு வினய் குமார் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார்.
வழக்கறிஞர் வாதம்
இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா இன்று திஹார் சிறை அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளின் வழக்கறிஞரின் வாதங்களை கேட்டிருந்தார். மரணதண்டனை நிறுத்தப்படுவதைக் கண்ட மூன்று கைதிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டததை திகார் சிறை அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஒரு குற்றவாளியின் கருணை மனு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், மற்றவர்களை தூக்கிலிட முடியும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கதறி அழுத தாய்
இதையடுத்து நீதிபதி தர்மேந்தர் ராணா மறு உத்தரவு வரும் வரை 4 குற்றவாளிகளையும் தூக்கில கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அத்துடன புதிய டத் வாரணட் தேதி எதையும் அவர் பிறப்பிக்கவில்லை இதை கேட்டு அதிர்ச்சிஅடைந்த நிர்பயாவின் தயார் ஆஷா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், தூக்கு தண்டனை ஒரு போதும் நிறைவேறாது என தற்பெருமை காட்டியாதாக வேதனை தெரிவித்தார்.