5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்
டெல்லி: பங்குச் சந்தைகள் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று சரிவுடன் துவங்கியுள்ளன. நாட்டின் பார்லே முதல் பல துறைகளிலும் ஆள் குறைப்பு செய்யும் அளவுக்கு பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில்தான், பங்குச் சந்தையும் அவ்வப்போது ஷாக் கொடுத்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியதுமே, பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பிப்ரவரி மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,700 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது.
9:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 259.50 புள்ளிகள் சரிந்து அதாவது 0.71% சரிவடைந்து 36213.43 புள்ளிகள் ஆகவும், நிஃப்டி 78.10 புள்ளிகள் அல்லது 0.73% சரிவடைந்து, 10663.30 புள்ளிகள் ஆகவும் இருந்தது.
சுமார் 188 பங்குகள் ஏற்றம் கண்டன. 394 பங்குகள் சரிவடைந்தன. 22 பங்குகள் மாறாமல் உள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்பிஐ, இந்தியாபுல்ஸ் ஹவுசிங், எச்டிஎப்சி, ஹிண்டல்கோ, அல்ட்ராடெக் சிமென்ட், சிப்லா, ஆர்ஐஎல், டாடா ஸ்டீல் மற்றும் ஐஓசி ஆகியவை பெரும் சரிவை சந்தித்த நிறுவனங்களாகும்.
விப்ரோ, டிசிஎஸ், எம் அண்ட் எம் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டன. ஐ.டி மற்றும் ஆட்டோமொபைல் தவிர, மற்ற துறைகளான வங்கி, எரிசக்தி, எஃப்.எம்.சி.ஜி, இன்ஃப்ரா, மெட்டல் மற்றும் பார்மா குழும பங்குகள் இறங்குமுகத்தில் உள்ளன.