டெல்லி - சிங்கு எல்லையில் தலித் விவசாயி படுகொலை.. நிஹாங் குழுவைச் சேர்ந்தவர் போலீசில் சரண்
டெல்லி: டெல்லி - சிங்கு எல்லையில் தலித் விவசாயி படுகொலைக்கு பொறுப்பேற்று நிஹாங் குழுவைச் சேர்ந்தவர் சரண் அடைந்துள்ளார்.
சீக்கியர்களின் புனித நூலை லக்பீர் சிங் அவமதித்ததால் கொன்றதாக நிஹாங் குழு கூறியுள்ளது.
டெல்லி மற்றும் ஹரியாணாவின் சிங்கு எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பகுதிககு அருகே விவசாயி ஒருவர் கொல்லப்பட்டு அவரது சடலம் போலீஸ் தடுப்பில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருந்தது.
சிஎஸ்கே vs கேகேஆர்.. 2 டீமில் மொத்தம் 6 பேர்.. ஐபிஎல் கப் யாருக்குன்னு தீர்மானிக்க போறது இவுங்கதான்!
இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயியின் மணிக்கட்டும் துண்டிக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
யார் அவர்
அத்துடன் கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சோனிபட் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் கூறுகையில், "வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சோனிபட் குண்டலியில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இப்போதைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
தலித் சமூகம்
இந்நிலையில் இறந்தவர் லக்பீர் சிங் (வயது 35) என போலீசார் அடையாளம் கண்டனர் . போலீஸ் வட்டாரங்களின்படி, லாக்பீர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மீது குற்ற வழக்கோ அல்லது அரசியல் இயக்க தொடர்போ இல்லை. லக்பீர் சிங் பஞ்சாபின் டார்ன் தரனில் உள்ள சீமா குர்த் கிராமத்தில் வசித்தவர் ஆவார். அவரது மனைவி ஜஸ்பிரீத் கவுர். இவர்களுக்கு 8, 10 மற்றும் 12 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
படுகொலைக்கு பொறுப்பேற்பு
இந்நிலையில் நிஹாங் சமூகத்தைச் சேர்ந்த சரவ்ஜீத் சிங் என்பவர் இந்த படுகொலைக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசாரால் தொடர்ந்து கைது செய்துள்ளனர் . சரவ்ஜீத் சிங்கை அடையாளம் காண காவல்துறை சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோவைப் பயன்படுத்தினர். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவமதிப்பு
சீக்கியர்களின் புனித நூலை லக்பீர் சிங் அவமதித்ததாகவும், அதனால், ஆத்திரமடைந்த நிஹாங்ஸ் அமைப்பினர், அவரை அடித்துக் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒரு காணொளியும் வைரலாகி வருகிறது. யாராவது அவமானம் செய்யும் செயலில் ஈடுபடுகிறார்களோ, நாங்கள் அவர்களை இந்த முறையில் மட்டுமே நடத்துவோம். நாங்கள் எந்த காவல்துறையையும், நிர்வாகத்தையும் அணுக மாட்டோம் என்று நிஹாங் அமைப்பபைச் சேர்ந்த ஒருவர் கூறினார்,