தலித் விவசாயி கொடூரமாக படுகொலை.. நிஹாங் சீக்கிய குழு பொறுப்பேற்பு.. யார் இவர்கள்.. பகீர் பின்னணி!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி
கொடூரமான படுகொலை
ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து விடாப்பிடியாக டெல்லி மற்றும் ஹரியானாவின் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதி அருகே லக்பீர் சிங் (வயது 35) என்ற விவசாயி படுகொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் போலீஸ் தடுப்பில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனையில் அவரது மணிக்கட்டும் வெட்டப்பட்டு இருந்தது கண்டு விவசாயிகள் உறைந்து போனார்கள்.
நிஹாங்ஸ் சீக்கிய அமைப்பினர்
லக்பீர் சிங் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். நிஹாங் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த சரவ்ஜீத் சிங் என்பவர் இந்த கொலையை செய்ததாக போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். சீக்கியர்களின் புனித நூலை விவசாயி லக்பீர் சிங் அவமதித்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த நிஹாங்ஸ் சீக்கிய அமைப்பினர், அவரை அடித்துக் கொலை செய்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இந்த கொலை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர்களின் அடையாளம்
இந்த கொடூர குணமுடைய நிஹாங் சீக்கிய அமைப்பினர் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் வழக்கமான சீக்கியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். நீல நிற உடைகள், கையில் ஈட்டிகள் மற்றும் வாள்கள், நீலநிற அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் இவர்களின் அடையாளமாகும். ஆனால் நிஹாங்கின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்று சான்றுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.நிஹாங் என்ற வார்த்தைக்கு தைரியம், தூய்மையானது மற்றும் கவலையற்றது என்று பொருள் என சீக்கிய வரலாற்றாசிரியர் டாக்டர் பல்வந்த் சிங் தில்லான் கூறுகிறார்.
போர் வீரர்கள் குழு
நிஹாங் குழுவினர் ஒரு போர் வீரர்கள் குழு என்றே அழைக்கப்படுகிறார்கள். நிஹாங் குழுவினர் அடிக்கடி இதுபோல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாட்டியாலாவில் உள்ள தேராவில் நிஹாங் சீக்கிய குழுவினர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிலரை கொடூரமாக தாக்கினார்கள். இந்த ஆண்டு ஜூலையில் நிஹாங் சீக்கியர்கள் லூதியானாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிர்ச்சியாக உள்ளது
நிஹாங்ஸ் ஒரு சிறிய சமூகமாகும். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு தொடந்து ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது இதனை மீறி நிஹாங்ஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியாக உள்ளது என்று பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குரு கோபிந்த் சிங் சேர் டாக்டர் குர்மீத் சிங் சித்து தெரிவித்தார்.