9 பிராமணர்கள் உட்பட 32 உயர்ஜாதியினருக்கு மோடி அமைச்சரவையில் இடம்!
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 9 பிராமணர்கள் உட்பட 32 உயர் ஜாதியினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமராக நரேந்திர மோடி நேற்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மோடியுடன் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த அமைச்சரவையில் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷாவை சேர்ந்த 4 பழங்குடியினர் மற்றும் 6 தலித்துகள் இடம்பெற்றுள்ளனர்.
இஸ்லாமியருக்கு வாய்ப்பு
அகாலி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், பாஜகவின் ஹர்தீப் புரி ஆகிய இருவரும் சீக்கியர்கள். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியும் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
பிராமணர்கள் 9 பேர்
மோடியின் இந்த அமைச்சரவையில் நிதின் கட்காரி உட்பட 9 பிராமணர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியதில் பாஜக மீது பிராமணர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதை சமாளிக்கும் வகையில்தான் பிராமணர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப்பிரதேச பாஜகவ தலைவர் மகேந்திர நாத் பாண்டேவும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களின் வாக்குகளைக் கவருவதற்கு அர்ஜூன் முண்டாவை மத்திய அமைச்சராக்கியுள்ளது பாஜக. மொத்தமாக மோடி அமைச்சரவையில் 32 பேர் உயர்ஜாதியினர், 13 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்டோரின் பாஜக முகமான தர்மேந்திர பிரதானும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாக்கு வங்கிகளுக்காக
பொதுவாக மோடி அமைச்சரவையானது வாக்கு வங்கிகளை குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் சமூகங்களின் வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கும் குறி
அதேபோல் அடுத்த தேர்தல்களில் வென்றாக வேண்டிய மாநிலங்கள் என குறிவைக்கப்பட்டுள்ள தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறது மோடி அமைச்சரவை. இத்தனைக்கும் ஒரு இடத்திலும் கூட வெல்லாத கேரளாவுக்கு 2 அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறடு.
அதிமுகவுக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லைதான். ஆனால் அதன் கூட்டணி கட்சியான அதிமுக தேனி தொகுதியில் வென்றது. அத்தொகுதியில் வென்ற ரவீந்தரநாத் குமார், அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் சீனியர் ராஜ்யசபா எம்.பி.யான வைத்திலிங்கம் தமக்கு பதவி வேண்டும் என கேட்டதால் யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை என கையைவிரித்து வழியனுப்பி வைத்துவிட்டது அதிமுக. இருப்பினும் அதிமுக எப்படியும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்துக்கு பிரதிநித்துவம் கிடைக்கும் என்றார்.