சபரிமலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் பெஞ்ச் நாளை முதல் விசாரணை
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் பெஞ்ச் நாளை முதல் விசாரணை நடத்துகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இத் தீர்ப்புக்கு எதிராக 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை கடந்த ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 9 நீதிபதிகளைக் கொண்ட் அரசியல் சாசன பெஞ்சுக்கு சீராய்வு மனுக்களை மாற்றியது.
இதனையடுத்து அண்மையில் தலைமை நீதிபதி போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் பெஞ்ச் அமைக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், நாகேஸ்வரராவ், மோகன் சாந்த கவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், நாளை முதல் சீராய்வு மனுக்களை விசாரிக்க உள்ளது. இந்த பெஞ்சில் ஒருமித்த தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முந்தைய பெஞ்சில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய இந்து மல்கோத்ரா, நாரிமன், சந்திர சூட் ஆகியோர் இடம்பெறவில்லை.